பாலுவுக்கு அன்று கணக்குப் பரீட்சை. நன்றாக எழுதியதாக ஓர் எண்ணம் இருந்தது. அதே சமயம் பரீட்சை கடினமாகவும் இருந்தது. நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என முணுமுணுத்துக்கொண்டே லிப்டில் ஏறினான். கதவு மூடும் சமயத்தில் ஒருத்தர் லிப்டை நிறுத்தி தானும் ஏறிக்கொண்டார். காதில் இயர்போன் மாட்டியபடி நின்றுகொண்டிருந்தவன் மெதுவாக ஒரு காதிலிருந்து இயர்போனைக் கழற்றினான். ஏறியது அவனது எலக்ட்ரானிக்ஸ் டீச்சர். “ஆண்டவா, என் மேல் கருணையே இல்லையா உனக்கு?” என்று மனத்தில் நினைத்துக்கொண்டே வணக்கம் வைத்தான்.
இரண்டு மாடிகளைத் தாண்டுவதற்குள் அவனுக்குள் பல்வேறு சிந்தனைகள் சிறகடித்தன. அவனுக்கோ அவரைப் பிடிக்காது. வகுப்பின் “அவுட்ஸ்டாண்டிங் மாணவன்” அவன். ஒரு நாள் கூட இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துப் பேசியதில்லை. வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டவன் பாலு. எதிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றே வேலை செய்வான். ஆனாலும் அந்த ஆசிரியர் அவனுக்கு முழு மதிப்பெண்கள் கொடுத்ததில்லை. “எப்போதும் ஒரு குறை இருக்கும்.” என்று கூறுவார். பாலுவை அது படுத்தியதில்லை. ஆனால் வாலிபத்திற்குரிய ஈகோ சும்மா விடுமா? ஒருமுறை கூட அவரிடம் பாலு படிப்பைத் தவிர வேறு எதைப்பற்றியும் பேசியதில்லை.
“நேற்றைய தேர்வைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது? ஒருவேளை திருத்தியிருப்பாரோ? ” இப்படி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது, திடீரென்று அபாய ஒலி அடித்தது. மின் தூக்கி நின்றது. ஆசிரியரும் பாலுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பேசிவைத்தது போல முதலில் தெரிந்தவர்களுக்கு போன் போட்டு உதவி கேட்டனர். சரிவரவில்லை. இருவரும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்தனர்.
நொடிகள் பல மணி நேரமானது. முன் வகுப்பில் இதே ஆசிரியர் சார்புக் கோட்பாடு பற்றிக் கூறியது நினைவிற்கு வந்தது. “சக மாணவியுடன் இப்படி மாட்டிக்கொள்ளும் அளவுக்கு அதிர்ஷ்டம் இல்லனாலும் பரவால்ல, ஆனா இப்படி இந்த ஆளோட கோர்த்துவிட்டுட்டியே” என்று புலம்பித்தான் என்ன பயன்? எமெர்ஜென்ஸி விளக்கின் ஒளியில் தன் ஆசிரியரின் முகத்தைப் பார்த்தான். வேர்வைத்துளிகள் ஒளியில் பிரதிபலித்தன. அப்போது உணர்ந்தான், அந்த அமைதி இருவரையும் விழுங்கிக்கொண்டிருந்தது.
என்ன பேசுவது? ஒருமுறை மனத்திற்குள் ஓட்டிப் பார்த்துவிட்டு, “சார், நீங்கள் இதற்கு முன் இப்படி மாட்டியதுண்டா?” என்று கேட்டான். அவனது குரலில் ஒரு விதமான தயக்கமும் பயமும் கலந்திருந்தன. அவனது ஆசிரியர் அவனைப் பார்த்தார். அந்த ஒளியில் அது அவனுக்கு ஒரு விசாரணை போல் தோன்றியது. தனது போனில் உள்ள டார்ச்சையும் ஒளிரவிட்டான்.
“இதுதான் முதல் முறை.” அவரது குரலிலும் ஒரு விதமான பதற்றம் தெரிந்தது. கழற்றிய இயர்போனை ஆசிரியரிடம் நீட்டினான் பாலு. கொஞ்சம் யோசித்த பிறகு ஆசிரியர் அதை வாங்கிக்கொண்டார். அமைதியுடன் ஆழ்ந்த சிந்தனையும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
அந்தக் குறை என்னவென்று இன்றுவரை அவரும் சொன்னதில்லை, அவனும் யோசித்ததில்லை.
மீட்புக் குழு வந்து கதவைத் திறந்த போது பலமணிநேரமானதுபோல் இருந்தது. இருவரும் விடை பெற்றனர்.
அடுத்த நாள் வகுப்பிற்கு வழக்கம்போல் தாமதமாக வந்தான் பாலு. ஆனால், நின்று அனுமதி கேட்ட பிறகே உள்ளே சென்றான். வகுப்பில் ஆர்வத்தோடு கலந்துகொண்டான். ஆசிரியருக்கு ஆச்சரியமாக இருந்தது, ஆனாலும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
பின் வந்த தேர்வுகளில் ஆசிரியரின் அறிவுறுத்தல்படி தனது தவறுகளைத் திருத்திக்கொண்டான். முழு மதிப்பெண்களும் பெற்றான்.
சக மாணவர்கள் கேட்கும்போது தனது குறையைப் பற்றி யோசிப்பான் பாலு. அன்று லிப்டில் மாட்டியது அவனுக்கு நினைவிருந்தது. என்ன நடந்ததென்று நினைவில்லை. தன் குறையை அன்றுதான் உணர்ந்தோம் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் நடுவில் கொஞ்சம் பக்கங்களைக் காணவில்லை. எழுதப்பட்டதா என்றும் தெரியவில்லை.
Comments
Post a Comment